திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5.60 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், மலேசியா, துபை உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருச்சி வரும் விமானங்களில், அதிகளவில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை திருச்சி விமான நிலையத்தில், மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவினர் முகாமிட்டு, மலேசியாவில் இருந்து வந்த 2 விமானங்கள் சிங்கப்பூர் மற்றும் துபையிலிருந்து வந்த தலா ஒரு விமானம் என மொத்தம் 4 விமானங்களிலும் வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.
இதில் 57 பயணிகளிடம் இருந்து ரூ.5.60 கோடி மதிப்பிலான 11.20 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், விமான நிறுவனப் பணியாளர்களுக்கும், விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கும் தொடர்பு உள்ளதா என மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.