கேரளத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் நெல்லை ரயில் நிலையத்தில் தடம்புரண்டது.
கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லைக்கு இன்று அதிகாலை 4.20 மணிக்கு வந்தடைந்தது. பயணிகளை இறக்கி விட்ட பிறகு ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணிக்காக ரயில் பெட்டி பராமரிப்பு நிலையத்தில் உள்ள உள்ள மூன்றாவது தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்தது.
இதையும் படிக்க- பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜு காலமானார்
அப்போது பிட்லைன் அருகே எஸ் 3 பெட்டி திடீரென தடம் புரண்டது. இதைத் தொடர்ந்து இன்ஜின் டிரைவர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகளும் தொழில் நுட்ப ஊழியர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் சுமார் 3 மணி நேரம் மீட்பு பணி நடந்த நிலையில் ஜாக்கி உதவியுடன் தடம் புரண்ட எஸ் 3 பெட்டியின் சக்கரங்கள் சரிசெய்யப்பட்டு ரயில் பிட்லைனுக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் நெல்லை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ரயில் தடம் புரண்டது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக மதுரையிலிருந்து ரயில்வே அதிகாரிகள் வந்து நேரடியாக விசாரணை நடத்தப் போவதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.