காவல்துறை பாதுகாப்பை தவறாக பயன்படுத்தியதாக ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காவல்துறை வழங்கியுள்ள பாதுகாப்பை தவறாக பயன்படுத்தி அதிமுக அலுவலகத்திற்கு நுழைந்து தாக்குதல் நடத்தியதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதுகாப்பை தவறாக பயன்படுத்தியதால் காவல்துறை ஓபிஎஸ்ஸுக்கு வழங்கியுள்ள பாதுகாப்பை மறுஆய்வு செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதிராஜாராம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, எந்த முகாந்திரமும் இல்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளதாக கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.