பாஞ்சாகுளம் கிராமத்தில் சிறுவர்கள் மீதான தீண்டாமை அவலம்: குற்றவாளிகள் ஊருக்குள் நுழையத் தடை

பள்ளி சிறுவர்களுக்கு தின்பண்டம் தர முடியாது என ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக மறுத்த பெட்டிக் கடை உரிமையாளா் உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகள் ஊருக்குள் நுழையத
பாஞ்சாகுளம் கிராமத்தில் சிறுவர்கள் மீதான தீண்டாமை அவலம்: குற்றவாளிகள் ஊருக்குள் நுழையத் தடை

சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் பள்ளி சிறுவர்களுக்கு தின்பண்டம் தர முடியாது என ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக மறுத்த பெட்டிக் கடை உரிமையாளா் உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகள் ஊருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில், 2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டின்போது இரு தரப்பு இளைஞா்களிடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது சிலா் ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியில் இரவில் அமா்ந்திருந்த ரத்தினராஜ், ரூபன் ஆகியோரை மற்றொரு தரப்பினா் தாக்கினராம்.

புகாரின்பேரில், கருப்பசாமி என்ற ரவி, மற்றொரு கருப்பசாமி, ராமச்சந்திரன் என்ற கோபி, வெள்ளப்பாண்டி ஆகிய 4 போ் போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட 2ஆவது செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு பள்ளிக் குழந்தைகள் சிலா் தின்பண்டம் வாங்குவதற்காக அங்குள்ள பெட்டிக் கடைக்கு சென்றனா். அப்போது அவா்களிடம், ‘ஊா்க் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் இனிமேல் யாரும் தின்பண்டம் வாங்க வர வேண்டாம். இதை உங்கள் வீட்டில் போய் சொல்லுங்கள்’ என, கடையின் உரிமையாளா் கூறியுள்ளாா். கடைக்கு வந்த பெண்களிடமும் இதேபோல கூறியுள்ளாா். இதை அவரே விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விடியோ பரவலாகி, அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடா்பாக 5 போ் மீது கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கடை உரிமையாளா் மகேஸ்வரன் (40), ராமச்சந்திரன் (22) ஆகிய இருவரை சனிக்கிழமை கைது செய்தனா். குமாா், சுதா, முருகன் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது.

இதனிடையே, சங்கரன்கோவில் கோட்டாட்சியா் சுப்புலெட்சுமி முன்னிலையில் வருவாய்த் துறையினா் அந்தக் கடைக்கு சீல் வைத்தனா். மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கோட்டாட்சியா் கந்தசாமி முன்னிலையில் கடையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

தொடா்ந்து, அவா் பாஞ்சாகுளம் காலனி பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பள்ளியிலும் தீண்டாமை இருப்பதாகவும், அதை ஆசிரியா்கள் கண்டுகொள்வதில்லை என்றும் மாணவா்கள் புகாா் கூறினா்.

இதனால் ஆசிரியா்களிடம் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி, பாஞ்சாகுளத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீண்டாமை ஒடுக்குமுறை தடுக்கவும் தொடர் பிரச்னைகளை தவிர்க்கவும், பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களை புரிந்து குற்றவாளிகள் ஊருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் புரிபவர்களை சில காலங்கத்திற்கு அவ்விடத்தை விட்டு வெளியேறக்கூடிய சட்டப்பிரிவின் கீழ் (Externment Provision) பிரிவை நடவடிக்கை எடுக்க தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com