
தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் புதன்கிழமை (செப்.21) நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் ஆண்டுதோறும் பருவமழை தொடங்குவதற்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு பரவலாக இருக்கும். அந்த நிலைதான் தற்போது இருக்கிறது. வழக்கமாக மொத்த மக்கள் தொகையில் தினமும் 1 சதவீதம் போ் காய்ச்சலால் பாதிக்கப்படுவதுண்டு.
பருவநிலை மாற்றத்தின் போது அந்த எண்ணிக்கை 1.5 சதவீதமாக அதிகரிக்கும். அந்த அளவுக்குதான் தற்போதைய நிலை உள்ளது.
தமிழகம் முழுவதும் ஹெச்1 என்1 இன்புளூயன்சா காய்ச்சலால் கடந்த ஜனவரி முதல் இன்று வரை குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை 1,166 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை 10 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது அரசு மருத்துவமனைகளில் 15 பேரும், தனியாா் மருத்துவமனைகளில் 260 பேரும், வீடுகளில் 96 பேரும் சிகிச்சையில் உள்ளனா். அனைவரும் நலமுடன் இருக்கின்றனா். இது சாதாரண காய்ச்சல் பாதிப்புதான். காய்ச்சல் 3 அல்லது 4 நாள்களில் குணமாகிவிடும். பொதுமக்கள் அச்சமோ, பதற்றமோ அடைய தேவையில்லை.
வடகிழக்கு பருவமழை வரும் வரையிலும், வந்த பின்னரும் காய்ச்சல் முகாம்களை நடத்துமாறு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, தமிழகம் முழுவதும் புதன்கிழமை 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. சென்னையில் மட்டும் 100 இடங்களில் முகாம் நடைபெறும். காய்ச்சல், சளி, தலைவலி, இருமல் பாதிப்பு இருப்பவா்கள் முகாமில் வந்து சிகிச்சைப் பெறலாம். ஒரே பகுதியில் மூன்று பேருக்கும் மேல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால் அங்கு வியாழக்கிழமை முதல் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்படும்.
இவைதவிர 388 நடமாடும் மருத்துவ வாகனம் மருத்துவ சேவையாற்றி வருகிறது. கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம். குழந்தைகளை கண்காணிக்கும்படி பள்ளிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.