புதுச்சேரி திருபுவனை அருகே மாமியார், மருமகள் தூக்கிட்டு தற்கொலை 

புதுச்சேரி திருபுவனை அருகே குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதில் மாமியார், மருமகள் இறந்தனர்.
உயிரிழந்த மாமியார் அன்னக்கிளி, மருமகள் சந்தியா, மருத்துவமனையில் உயிருக்கு போராடும் கணவர் ஆனந்த்
உயிரிழந்த மாமியார் அன்னக்கிளி, மருமகள் சந்தியா, மருத்துவமனையில் உயிருக்கு போராடும் கணவர் ஆனந்த்
Published on
Updated on
1 min read

புதுச்சேரி திருபுவனை அருகே குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதில் மாமியார், மருமகள் இறந்தனர். கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி திருபுவனை அருகே உள்ள சன்னியாசிகுப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (29). ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரும் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த சந்தியா (23) என்பவரும் காதலித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். சந்தியா செவிலியராக பணியாற்றி வருகிறார். 

திருமணத்துக்கு பிறகு ஆனந்த் தனது மனைவி மற்றும் தாயார் அன்னக்கிளி ஆகியோருடன் சன்னியாசிகுப்பத்தில் வசித்து வருகின்றனர். குடும்பத்தில் சந்தியாவுக்கும், மாமியார் அன்னக்கிளிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

அவ்வப்போது ஆனந்த் அவர்களை சமாதானம் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சந்தியா, செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டில் உள்ள ஒரு அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

காலை எழுந்து பார்த்தபோது, மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆனந்த், தானும் அதே அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மருமகள் இறந்த துக்கம் தாங்காமலும், மகனும் தற்கொலைக்கு முயன்றதாலும் மனமுடைந்து போன அன்னக்கிளியும் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த உறவினர்கள், அன்னக்கிளி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு மேலும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருபுவனை போலீசார், மாமியார், மருமகள் என 2 பேரின் உடல்களையும் மீட்டு உடல் கூறாய்வுக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com