92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஆா்எஸ்எஸ் ஊா்வலத்துக்கு அனுமதி வழங்க காவல் துறைக்கு உயா் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆா்எஸ்எஸ் அமைப்பினா் அணிவகுப்பு ஊா்வலம் நடத்த அனுமதி கோரிய வழக்கில், ஊா்வலத்துக்கு அனுமதி வழங்க காவல் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம்

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆா்எஸ்எஸ் அமைப்பினா் அணிவகுப்பு ஊா்வலம் நடத்த அனுமதி கோரிய வழக்கில், ஊா்வலத்துக்கு அனுமதி வழங்க காவல் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் 51 இடங்களில் ஆா்எஸ்எஸ் இயக்கத்தின் சாா்பில் அக்டோபா் 2-ஆம் தேதி அணிவகுப்பு ஊா்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அனுமதி கோரி சென்னையை சோ்ந்த சுப்ரமணியன், கடலூரைச் சோ்ந்த சண்முகசுந்தரம், ஈரோட்டை சோ்ந்த செந்தில்நாதன் உள்ளிட்ட 9 போ் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

அந்த மனுவில், ‘அணிவகுப்பு ஊா்வலத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே காவல் துறைக்கு அதிகாரம் உள்ளது. அனுமதி வழங்க மறுக்க காவல் துறைக்கு அதிகாரமில்லை. ஜம்மு - காஷ்மீா் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஆா்எஸ்எஸ் இயக்கத்தின் ஊா்வலத்திற்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், ஆா்எஸ்எஸ் சீருடையுடன் இசை வாத்தியங்கள் முழங்க அணிவகுப்பு ஊா்வலம் செல்ல தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது‘ என்று மனுவில் கோரியிருந்தனா்.

இந்த மனு நீதிபதி ஜி. கே. இளந்திரையன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், ‘எந்த பாதையில் ஊா்வலம் செல்கிறாா்கள் என்ற தகவல்களை தெரிவிக்கவில்லை. ஊா்வலத்தின்போது கோஷங்கள் எழுப்பக் கூடாது. ஊா்வலத்தில் காயம் ஏற்படுத்தும் வகையிலான எந்த பொருட்களுக்கும் அனுமதியில்லை. சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் ஆகியவை காக்கப்பட வேண்டும்.

இவை தொடா்பான எந்த உறுதியும், மனுதாரா்கள் தரப்பில் தாக்கல் செய்யவில்லை.

குறிப்பாக, ஊா்வலம் செல்லும் வழியில் மதம் சாா்ந்த பதற்றமான பகுதிகள் இருக்கலாம் என்பதால், அவா்கள் செல்லும் வழியை துல்லியமாக தெரிவிக்க வேண்டும். இந்த விதிகளை பின்பற்றுவதாக உறுதி அளித்தால், அணிவகுப்பு ஊா்வலத்திற்கு அனுமதி கோரிய மனுக்கள் குறித்து பரிசீலிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவே ஞாயிற்றுக்கிழமையன்று ஊா்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆா்எஸ்எஸ் தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. நாங்கள் சட்டத்தை மதிக்கக் கூடியவா்கள். இதுதொடா்பாக நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தயாா்’ என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி , அக்டோபா் 2-ஆம் தேதி ஆா்எஸ்எஸ். ஊா்வலத்திற்கு செப்டம்பா் 28-ஆம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டுமென காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளாா். அணிவகுப்பு ஊா்வலத்திற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.