சென்னை: கோடை வெயிலை விடவும், எரிபொருள் விலைவாசி உயர்வும் அதன் தொடர்ச்சியாக அதிகரிக்கும் உணவுபொருள் விலையேற்றமும் பொதுமக்களை வறுத்தெடுத்து வருகிறது.
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை மற்றும் பெட்ரோல், டிசல் விலை உயர்வு காரணமாக சென்னையில் தேநீர் கடைகளில் தேநீர் மற்றும் காபியின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
சாலையோரம் செயல்படும் தேநீர் கடைகளில் ஒரு தேநீர் விலை 10 ரூபாயிலிருந்து ரூ.12 என்ற அளவுக்கும், காபியின் விலை ரூ.12லிருந்து ரூ.15 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இறுதியாக கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தேநீர், காபியின் விலைகள் உயர்த்தப்பட்டன்.
சென்னையில் மாநகராட்சியில் மட்டும் சுமார் 3,500 தேநீர் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் நாள் ஒன்றுக்கு 3 முதல் 15 லிட்டர் பால் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, சிறிய மற்றும் நடுத்தரமாக ஏராளமான உணவகங்களிலும் தேநீர், காபி விற்பனையாகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை ரூ.1000 அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தேநீர் கடை உரிமையாளர்கள் கழகம் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு இதன் விலை ரூ.1,200 ஆக இருந்தது. தற்போது ரூ.2,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல கொழுப்பு நிறைந்த பால் லிட்டரூக்கு ரூ.54லிருந்து தற்போது ரூ.55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு பெட்டிக் கடையில் தேநீர் விற்றால்தான், அங்கு வாடிக்கையாளர் 8 - 10 நமிடங்கள் வரை நிற்பார். அப்போதுதான் கடையில் வைத்திருக்கும் மற்ற சில பொருள்களும் விற்பனையாகும். ஆனால், இந்த தேநீர் விற்பதே இனி லாபம் தரும் தொழிலாக இருக்காது போல என்கிறார் சாலையோரம் தேநீர் கடை அமைத்திருக்கும் தொழிலாளி.
சென்னையில் இப்படியிருக்கு, திருச்சியில் ஏற்கனவே பல்வேறு விலை உயர்வுகள் காரணமாக தேநீர் ரூ.12க்கும், காபி ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் விலையை ஏற்றினால் 50 சதவீத வாடிக்கையாளர்கள் கடைக்கு வருவே நின்றுவிடும். இதனால் நட்டம் தான் ஏற்படும் என்கிறார்கள் தேநீர் கடைக்காரர்கள்.