உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களுக்கு தமிழக அரசு உதவும்: பேரவையில் அமைச்சர் பேச்சு
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்களின் நலன் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் இன்று பேசினார்.
அப்போது பேசிய அவர்,
உக்ரைன் நாட்டில் இருந்து தமிழக மாணவர்களை மீட்க ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெசிந்தா தலைமையில் வாட்ஸ்ஆப் குழு அமைத்து உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்கள் மீட்கப்படுவர் என்றும் இதற்கான செலவை அரசே ஏற்கும் என்றும் முதல்வர் கூறினார்.
அதன்படி, உக்ரைன் நாட்டில் இருந்து 1,890 தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மாணவர்களை மீட்க எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டது.
உக்ரைனில் இருந்து கடைசியாக வந்த மாணவர்கள் குழுவை முதல்வர் மு,.க.ஸ்டாலின் நேரில் சென்று வரவேறறார். அதன்பின்னர் உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்களின் படிப்பைத் தொடர்வது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களை ருமேனியா, ஹங்கேரி, கஜகஸ்தான், செக்குடியரசு, போலந்து போன்ற நாடுகளில் மருத்துவப் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். இந்த விஷயத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும்.
எனவே, தமிழகத்தில் படித்தாலும் வெளிநாட்டில் படித்தாலும் தமிழக மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும். உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்றார்.