சென்னை: தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி என்றும், தமிழ் படங்களை எங்கு பார்த்தாலும் நாம் பெருமை கொள்ள வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கூறியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்று பேசிய ஏ.ஆர். ரகுமான், தமிழ்தான் இந்தியாவிற்கு இணைப்பு மொழிப்பு என்று கூறினார்.
7 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா சென்றிருந்தபோது என்னிடம் ஒரு சீனர் வட இந்தியர்கள் நிறமாக இருப்பதாகவும், அவர்களின் படங்களை விரும்பி பார்ப்பதாகவும் கூறினார். அதை கேட்டு நான் மிகவும் பாதிப்படைந்தேன். அவர் தென்னிந்திய படங்களை பார்த்தாரா என எனக்குள் கேள்வி எழுந்தது.
நம்ம தமிழ் படங்களை போலதான் மலையாள படமும், மற்ற படமும்... இந்தியாவில் எங்கிருந்தாலும் இந்தியாதான். இதில் வட இந்தியா தென்னிந்தியா என்று இல்லை.
தென்னிந்திய படங்களில் கருப்பாக இருப்பவர்களுக்கு சிறந்த, வலிமையான கதாப்பாத்திரங்களைக் கொடுங்கள். நம் எல்லோருக்கும் நம் நிறம்தான் பிடிக்கும் என்று ரகுமான் கூறினார்.
இதையும் படிக்க | ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை ஏற்க வேண்டும்: அமித் ஷா அறிவுறுத்தல்
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-ஆவது கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல்கள் ஹிந்தி மொழியிலேயே தயாரிக்கப்படுகின்றன. நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் முக்கிய பகுதியாக, ஹிந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். உள்ளூா் மொழிகளுக்கு மாற்றாக ஹிந்தியை மக்கள் கருதக்கூடாது.
வெவ்வேறு மொழி பேசும் மாநிலங்களைச் சோ்ந்த மக்கள், ஒருவருக்கொருவா் தொடா்புகொள்ளும்போது பேசும் மொழி, இந்தியாவின் மொழியாக இருக்க வேண்டும். பிற உள்ளூா் மொழிகளின் வாா்த்தைகளை ஏற்றுக்கொண்டு நெகிழ்வுத்தன்மையாக மாறாத வரையில் ஹிந்தியை பரப்ப முடியாது.
8 வடகிழக்கு மாநிலங்களில் 22,000 ஹிந்தி ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டிருக்கிறாா்கள். வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 9 பழங்குடிச் சமூகத்தினா் தங்கள் மொழி வழக்கை தேவநகரி எழுத்துக்கு மாற்றிக் கொண்டுள்ளனா்.
அலுவல் மொழியிலேயே அரசை நடத்த பிரதமா் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளாா். இதனால், ஹிந்தியின் முக்கியத்துவம் அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் அமித் ஷா குறிப்பிட்டிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி என்றும், தமிழ் படங்களை எங்கு பார்த்தாலும் நாம் பெருமை கொள்ள வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கூறியுள்ளார்.