தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை வரை உயா்மட்டச் சாலை: எப்படி இருக்கப் போகிறது?

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.485 கோடி மதிப்பில் உயா்மட்டச் சாலை அமைக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவித்தாா்.
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை வரை உயாமட்டச் சாலை
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை வரை உயாமட்டச் சாலை

சென்னை: போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.485 கோடி மதிப்பில் உயா்மட்டச் சாலை அமைக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் எ.வ.வேலு வெளியிட்ட அறிவிப்புகளில் இந்த குறிப்பிட்ட அறிவிப்பு இடம்பெற்றிருந்தது.

சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்ஐஇடி கல்லூரி சாலை சந்திப்பு, செனெடாப் சந்திப்பு, நந்தனம் சந்திப்பு மற்றும் சிஐடி சாலை சந்திப்புகளை கடந்து சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை ரூ.485 கோடி மதிப்பில் உயா்மட்டச் சாலை சாலை அமைக்கப்படும். இதனால், தடையற்ற சீரான வாகன போக்குவரத்து உறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து இன்று விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை மாநகருக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டம் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அண்ணா சாலையையும், சென்னை மாநகரையும் பிரித்துப் பார்க்கவே இயலாது. மாநகரின் மிகப் பிரதானச் சாலை என்பதால் அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் மிகுதியாக காணப்படும்.

அண்ணாசாலையில் இந்திய ராணுவத்தின் தென்மண்டலத் தலைமையகம். ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை, எல்.ஐ.சி. அமெரிக்க துணை தூதரகம், மருத்துவ இயக்குனரகம் மற்றும் பல அரசு அலுவலகத் தலைமையகங்கள். கல்வி நிறுவனங்கள், பல்நாட்டு வர்த்தக மையங்கள், வணிக வளாகங்கள். வங்கித் தலைமையகங்கள், பல மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருவதால், இச்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

குறிப்பாக தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.5 கி.மீ நீளத்தைக் கடக்கவே சராசரியாக 30 முதல் 40 நிமிடங்கள் ஆகின்றது. இப்பகுதிக்குட்பட்ட அனைத்து சாலை சந்திப்புகளிலும், வாகனங்கள் அணிவகுத்து மணிக்கணக்கில் காத்திருக்கும் சூழலையும் காணமுடிகிறது. இதிலும் குறிப்பாக நந்தனம் சந்திப்பு, சிஐடி நகர் சந்திப்பு ஆகியவற்றால், காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு காத்திருப்பது அன்றாட வாடிக்கையாகியுள்ளது. ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகளும் செல்ல முடியாத நிலையும் ஏற்படுகின்றது. மேலும் பேரிடர்க் காலத்தில் மக்களின் போக்குவரத்திற்கு பாலமாக உள்ளதும் அண்ணா சாலையே.

இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகான  தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தேனாம்பேட்டையிலிருந்து - சைதாப்பேட்டை வரை உள்ள முக்கிய சாலை சந்திப்புகளான ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை பகுதிகளை அண்ணாசாலையுடன் இணைக்கும் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, தி.நகர், பாண்டிபஜார் பகுதிகளை இணைக்கும் தியாகராயா சாலை சந்திப்பு, டி.டி.கே சாலையை அண்ணாசாலையுடன் இணைக்கும் எஸ்ஐஇடி கல்லூரி சாலை சந்திப்பு. செனடாஃப் சந்திப்பு, கோட்டூர்புரம், போட்கிளப், பசுமைச் சாலை வழிச்சாலை வெங்கட்நாராயணச் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் அண்ணா சாலையை வந்தடையும் சென்னை மாநகரின் முக்கிய சந்திப்புகளில் ஒன்றான நந்தனம் சந்திப்பு. தி.நகர் நிலையம், உஸ்மான் சாலைகளை இணைக்கும் சிஐடி நகர் மூன்றாவது மற்றும் முதல் பிரதானச் சாலை சந்திப்பு, சைதாப்பேட்டையிலுள்ள தாடண்டர் நகர் - ஜோன்ஸ் சாலை சந்திப்பு ஆகியவற்றை கடக்கும் வகையில் சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை 3.20 கி.மீ நீளத்திற்கு நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை ரூபாய் 485 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com