மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழக ஆளுநரின் கார் அணிவகுப்பு மீது, கருப்புக் கொடிகள் வீசப்பட்டன.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் செவ்வாய்க்கிழமை பங்கேற்றார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பாததைக் கண்டித்து, சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் மயிலாடுதுறையை அடுத்த மன்னன்பந்தலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, அங்கு சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் கைகளில் கருப்புக் கொடிகளுடன் குழுமினர். அதேபோல, அந்தப் பகுதியில் காவல் துறையினரும் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர். போராட்டக் குழுவினர் ஆளுநரின் காரை வழிமறித்திட முடியாத வகையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இருப்பினும், அந்த வழியே ஆளுநரின் கார் அணிவகுப்பு சென்ற போது, போராட்டக் குழுவினர் திடீரென கருப்புக் கொடிகளை ஆளுநரின் காரை நோக்கி வீசினர். அந்தக் கொடி அவர் மீது விழவில்லை எனினும், போராட்டக்காரர்கள் தொடர்ந்து கருப்புக் கொடியை ஆளுநரின் வாகன அணிவகுப்பு மீது வீசினர். இதனால், அந்தப் பகுதியில் சில நிமிடங்கள் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.