திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே சுத்தமல்லி பழவூர் பகுதியில் நடைபெற்ற கோயில் கொடை விழாவில் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே உள்ள பழவூர் பகுதியில் உள்ள கோயிலில் கொடை விழா வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இங்கு, சுத்தமல்லி காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரேசா (29) தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அங்கு குடி போதையில் இருந்த நபர், காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரேசாவை கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளரை மீட்டு சேரன்மகாதேவி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், காயமடைந்த காவல் உதவி ஆய்வாளரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இது குறித்து சுத்தமல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய முத்துச்சாமி மகன் ஆறுமுகம் (40) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயில் கொடை விழாவில் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய விவகாரம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | வெற்றிலைக்குப் பதிலாக பீடா பழக்கம் அதிகரிப்பு