திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே பாதுகாப்பு பணியின்போது கத்தியால் குத்தப்பட்டதில் காயமடைந்த பெண் உதவி ஆய்வாளருக்கு ரூ.5 லட்சம் காசோலையை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம், சுத்த மல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் மார்க்ரெட் தெரேசா (29), சுத்தமல்லி காவல் சரகத்துக்குள்பட்ட பழவூர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கோயில் திருவிழாவில் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரேசா தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நள்ளிரவில் காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரேசாவை அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். இதையடுத்து அங்கிருந்த போலீஸார், அவரை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பெண் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட செய்தியை அறிந்த முதல்வா் மு.க. ஸ்டாலின், அவரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு ஆறுதல் கூறினாா். மேலும், அவருக்கு உயா்தர சிகிச்சை அளிக்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் விஷ்ணுவுக்கு உத்தரவிட்டதோடு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கிடவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இந்நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளரை தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஞாயிற்றுக்கிழமை காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க், திருநெல்வேலி டிஐஜி பிரவேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட ரூ. 5 லட்சம் நிவாரண தொகைக்கான காசோலையை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உதவி ஆய்வாளரிடம் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, பாளையங்கோட்டை எம்.எல்.ஏ. அப்துல் வஹாப், மேயர் சரவணன், துணைமேயர் ராஜு உள்பட பலர் உடன் இருந்தனர்.
இதையும் படிக்க | கிராம சபைக் கூட்டம்: பொதுமக்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்