தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட குடும்பத் தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற மகனைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் நாஞ்சிகோட்டை சாலை ஈ.பி. காலனி அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் ஏ. கரும்பாயிரம் (46), இவர் திருப்பூரில் கட்டடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இவருக்கு இரு மனைவிகள். இவர்களில் முதல் மனைவி ராதிகா (38). இவர் தனது மகன்கள் ஜீவா (23), விக்ரம் (20) ஆகியோருடன் அன்னை சத்யா நகரில் வசித்து வருகிறார்.
கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூரில் இரண்டாவது மனைவி சிவசங்கரி (36)யுடன் கரும்பாயிரம் வசித்து வந்தார். ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்குப் பிறகு ராதிகா வீட்டுக்கு கரும்பாயிரம் வெள்ளிக்கிழமை வந்தார்.
இதைத்தொடர்ந்து, கரும்பாயிரத்துக்கும், ராதிகாவுக்கும் சனிக்கிழமை அதிகாலை குடும்பப் பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
அப்போது ராதிகாவை கரும்பாயிரம் மண்வெட்டியால் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்து கோபமடைந்த ஜீவா, அரிவாளால் கரும்பாயிரத்தை வெட்டினார். இதனால் பலத்த காயமடைந்த கருப்பாயிரம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தமிழ் பல்கலைக்கழகக் காவல்நிலையத்தினர் வழக்குப் பதிந்து ஜீவாவை தேடி வருகின்றனர்.