வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றதன் 92-ஆவது ஆண்டு நினைவையொட்டி, அகத்தியம் பள்ளியில் அமைந்துள்ள நினைவுத் தூண் வளாகத்தில் யாத்திரை குழுவினர், காங்கிரஸார் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று (ஏப்.30) காலை நடைபெற்றது.
வேதாரண்யத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான உப்பு சத்தியாகிரகப் போராட்டம் 1930, ஏப்ரல் 30 ஆம் தேதி ராஜாஜி தலைமையில் நடைபெற்றது. சர்தார் வேதரத்னம் போன்றோர் போராட்டம் வெற்றி பெற பெரும் பங்காற்றினர்.
இந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 30 ஆம் நாள் உப்பு அள்ளி, மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றன.
நிகழாண்டுக்கான நிகழ்ச்சியாக வேதாரண்யம் அகஸ்தியம் பள்ளியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவுத் தூண் அருகே உப்பு அள்ளி போராட்ட நினைவை வெளிப்படுத்தினர்.
இதில், முன்னாள் அமைச்சர் கே.வி. தங்கபாலு தலைமையிலான யாத்திரை குழுவினர், சமூக ஆர்வலர்கள், காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர். இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்று உப்பு அள்ளினார்.
இவர்கள் முன்னதாக வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டட வளாகத்திலிருந்து பாதயாத்திரையாக அகஸ்தியம் பள்ளியைச் சென்றடைந்தனர்.
நிகழ்ச்சியில், காங்கிரஸ் நிர்வாகிகள் ஸ்ரீ வல்லபிரசாத் முருகானந்தம், பொன்.கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன்,மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி. ராசேந்திரன், குருகுலம் நிர்வாகிகள் அ. வேதரத்தினம், அ. கேடிலியப்பன், பாதயாத்திரை குழுவினர் பங்கேற்றனர்.
இதையும் படிக்க | உப்பென்றும் சீனியென்றும் செப்பித் திரிவாரடீ...