தமிழகத்தில், சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பீட்டில், 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக் கட்டப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்து, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவது குறித்து பொறியாளர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் பி. செந்தில்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிக்க | தண்டோரா போடுவது இனி தேவையில்லை: ஆட்சியர்களுக்கு இறையன்பு உத்தரவு
ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மார்ச் 21ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். இந்த மருத்துவமனைக் கட்டடம் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது.