தண்டோரா போடுவது இனி தேவையில்லை: ஆட்சியர்களுக்கு இறையன்பு உத்தரவு

தண்டோரா போட்டுச் சொல்லும் நடைமுறை இனி தேவையில்லை என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு
தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு


சென்னை: முக்கிய அறிவிப்புகள், வெள்ள அபாய எச்சரிக்கை போன்றவை குறித்து கிராமப் பகுதிகளில் தண்டோரா போட்டுச் சொல்லும் நடைமுறை இனி தேவையில்லை என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவர் கைப்பட எழுதியிருக்கும் அறிக்கையில், மக்களிடம் முக்கிய செட்யதிகளை விரைவாகச் சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருப்பதையும், அதைச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன்.



அறிவியல் வளர்ந்து விட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் தண்டோரா போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை. ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வலம் வரச் செய்வதன் மூலம் மூலை முடுக்குகளிலெல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட இயலும்.

எனவே, தண்டோரா போடக் கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, விலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், மின்வேலி அமைக்கக் கூடாது, கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் நடந்த வன்முறையின்போது மக்கள் தூக்கிச் சென்ற பொருள்களை மீண்டும் ஒப்படைப்பது தொடர்பாக என பல்வேறு விஷயங்கள் குறித்தும் கிராமப் பகுதிகளில் தண்டோரா மூலமாகவே எச்சரிக்கை வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com