மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறையத் தொடங்கியதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு 1,80,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
காவிரியில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த 20 நாள்களில் அணைக்கு 132 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 100 டி.எம்.சி வெள்ளநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு இன்று வெள்ளிக்கிழமை வினாடிக்கு 2,40,000 கனஅடி வரை நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பாத்த நிலையில் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் அளவு சற்று குறைந்தது. அதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் சற்று குறைந்து உள்ளது.
இதையும் படிக்க | பி.இ. கலந்தாய்வில் புதிய நடைமுறை: அண்ணா பல்கலை. தகவல்
வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நீர்வரத்து குறைந்துள்ளதை அடுத்து அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2,10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,80,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அணை மின்நிலையம் மற்றும் சுரங்க மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கனஅடி வீதமும், 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 1,57,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.