ஈரோடு காவல் நிலையத்தை முன்னாள் ராணுவ வீரர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

முன்னாள் படை வீரர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பழனியப்பனை போலீசார் கைது செய்த நிலையில், முன்னாள் ராணுவ வீரர்கள் ஈரோடு தெற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
ஈரோடு காவல் நிலையத்தை முன்னாள் ராணுவ வீரர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

சுதந்திர நாளில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்த முன்னாள் படை வீரர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனியப்பனை போலீசார் கைது செய்த நிலையில், முன்னாள் ராணுவ வீரர்கள் காவல் நிலையத்தை  முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஈரோடு மாவட்ட முன்னாள் படை வீரர் சங்கத்தின் சார்பில் மற்ற மாநிலங்களைப் போல், முன்னாள் படைவீரர்களுக்கு வீட்டு வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், முன்னாள் படைவீரர்களின் விதவைகளுக்கு 100 சதவீதம் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக முன்னாள் படை வீரர்கள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஈரோடு கொல்லம்பாளையத்தில் வீட்டிலிருந்த ராணுவ வீரர் சங்கத்தின் தலைவர் பழனியப்பனை காவல்துறையினர்  கைது செய்து சூரம்பட்டி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து இதேபோல முன்னாள் படைவீரர்களின் விதவைகள் சங்கத்தின் தலைவர் தீபாவை காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து ஈரோடு முன்னாள் படைவீரர்கள் சங்கத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஈரோடு தெற்கு காவல் நிலையத்தினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com