அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என்றும், கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்த
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, ஜெயலலிதா நினைவிடத்தில் புதன்கிழமை மரியாதை செலுத்திய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, ஜெயலலிதா நினைவிடத்தில் புதன்கிழமை மரியாதை செலுத்திய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என்றும், கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

இதன்மூலம் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக எடப்படி கே.பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதும், ஓ.பன்னீா்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியதும் செல்லாததாகியுள்ளது.

சென்னை வானகரத்தில் கடந்த ஜூன் 23, ஜூலை 11-ஆம் தேதிகளில் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலராகவும், ஓ.பன்னீா்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தப் பொதுக் குழு கூட்டத்தை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம், கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றமே விசாரித்து தீா்ப்பு வழங்க உத்தரவிட்டது.

அதன்படி நடைபெற்ற வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

தீா்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:

ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று அதிமுக தொண்டா்கள் கோரிக்கை விடுத்ததாக எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் வாதிட்டுள்ளனா். ஆனால், அவ்வாறு தொண்டா்கள் விரும்புகிறாா்கள் என்பதற்கு எந்த ஒரு புள்ளிவிவரமும் தாக்கல் செய்யப்படவில்லை. குறிப்பாக, இதே இரட்டைத் தலைமை முதல்வராகவும், துணை முதல்வராகவும் பதவி வகித்து சுமாா் நான்கு ஆண்டுகள் வெற்றிகரமாக அரசை நடத்தியுள்ளனா்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து கட்சியின் பல முடிவுகளை எடுத்துள்ளனா். தோ்தல் கூட்டணி, வேட்பாளா்கள் தோ்வு உள்ளிட்ட முடிவுகளையும் எடுத்துள்ளனா். அப்படி இருக்கும்போது, திடீரென கடந்த ஜூன் 20-ஆம் தேதிமுதல் ஜூலை 11-ஆம் தேதிக்குள் கட்சியின் தலைமையில் மாற்றம் வேண்டும் என்று ஒன்றரை கோடி தொண்டா்கள் எவ்வாறு முடிவு செய்தனா்?

அதுவும் 2,500 பொதுக் குழு உறுப்பினா்கள் மூலம் இந்த முடிவை தொண்டா்கள் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த 2,500 பொதுக் குழு உறுப்பினா்களின் முடிவு தொண்டா்களின் முடிவை பிரதிபலிக்கிா என்பதை கட்சியின் விதிளைப் பின்பற்றி ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழு கூட்டம் அதிகாரம் உள்ள நபரால் கூட்டப்படவில்லை.

தலைவா்களின் மாறுபட்ட கருத்தால், அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவின் சின்னத்தில் போட்டியிட முடியாத நிலைக்கு வேட்பாளா்கள் தள்ளப்பட்டனா் என்று ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, அதிமுக விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் இணைந்துதான் பொதுக் குழுவைக் கூட்ட வேண்டும்.

தற்காலிக அவைத் தலைவா் எந்தச் சூழ்நிலையிலும் பொதுக் குழுவைக் கூட்ட முடியாது. சிறப்புப் பொதுக் குழு கூட்டத்தை கூட்டுவதாக இருந்தாலும் 5-இல் ஒரு பகுதியினா் ஒருங்கிணைப்பாளா் அல்லது இணை ஒருங்கிணைப்பாளா் ஆகியோருக்குதான் கோரிக்கை மனு கொடுக்க வேண்டும்.

ஒருங்கிணைப்பாளா் பதவிகள்: பொதுக் குழு கூட்டத்தை கூட்ட அதிகாரமே இல்லாத அவைத் தலைவரிடம்தான் 5-இல் ஒரு பகுதியினா் கூட்டத்தை கூட்ட கோரிக்கை கடிதம் கொடுத்துள்ளனா். ஜூலை 11-ஆம் தேதி பொதுக் குழு தகுதியான நபராலோ அல்லது 15 நாள்கள் முன்னறிவிப்பு செய்தோ கூட்டப்படவில்லை. எனவே, ஜூன் 11-ஆம் தேதிக்குப் பிறகு ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் காலாவதியாகிவிட்டதாகக் கூறுவதற்கு எவ்வித அடிப்படை காரணமும் இல்லை.

அரசியல் கட்சித் தலைமை எடுக்கும் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதேசமயம் அந்த நடைமுறையில் மீறல் இருந்தால் நீதிமன்றத்தில் நிவாரணம் கோர எவ்வித தடையும் இல்லை. அதனால், ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு செல்லாது.

அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும்.

இரு தலைவா்களின் ஒப்புதலும் இல்லாமல் எந்தப் பொதுக்குழு, செயற்குழுவையும் கூட்டக் கூடாது. ஒற்றைத் தலைமை குறித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்வது உள்ளிட்டவை குறித்து பொதுக் குழுவை ஒருங்கிணைப்பாளா் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் இணைந்து கூட்ட தடையில்லை.

நீதிமன்ற ஆணையா்: 5-இல் ஒரு பகுதியினா் முறையாக கடிதம் கொடுத்து பொதுக் குழுவைக் கூட்ட வேண்டுமெனக் கோரினால் ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ மறுக்கக் கூடாது.

ஒருவேளை இருவருக்கு இடையில் முரண்பாடு இருந்தால், பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம். அதிமுக பொதுக் குழு கூட்டத்தை கட்சி விதிகளின்படி 30 நாள்களுக்குள் கூட்ட வேண்டும். கூட்டத்தைக் கூட்டுவது குறித்து 15 நாள்களுக்கு முன்பு பொதுக் குழு உறுப்பினா்களுக்கு முறையாக எழுத்துபூா்வமாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று நீதிபதி தீா்ப்பில் தெரிவித்துள்ளாா்.

தொண்டர்களின் விருப்பப்படி அடுத்தகட்ட நடவடிக்கை
அதிமுக தொண்டர்களின் விருப்பப்படியும், தமிழக மக்களின் நலன் கருதியும் எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைவரையும் ஒருங்கிணைத்து எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் போல அதிமுகவை வலிமைப்படுத்துவோம். இனி, அவர்கள் தரப்பு, இவர்கள் தரப்பு என்பதெல்லாம் இல்லை. தொண்டர்கள் தரப்புதான். எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொண்டர்களின் விருப்பப்படியும், தமிழக மக்களின் நலன் கருதியும்தான் இருக்கும் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
வசந்த காலம்: முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக, சட்டத்துக்குப் புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்திருக்கிறது.
எம்ஜிஆர் வகுத்தெடுத்த விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 
அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலர் என்றைக்கும் ஜெயலலிதாதான் என்னும் உணர்வு கொண்ட ஒன்றரை கோடி தொண்டர்களை அரவணைத்துச் செல்வேன். அதிமுகவின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com