புதுவை மாநிலத்தில் 2022 - 23 ஆம் நிதி ஆண்டிற்காக ரூ. 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10 ஆம் தேதி துணை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் மத்திய அரசு, பட்ஜெட்டிற்கு அனுமதி அளிக்காததால் அன்றைய தினமே பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று(திங்கள்கிழமை) மீண்டும் தொடங்கியது.
காலை 9.45 மணிக்கு பேரவை கூடியதும், 2022 - 2023 ஆம் நிதி ஆண்டிற்கான ரூ. 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, துறை வாரியாக நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்து உரையாற்றினார்.
வருகிற 30-ந்தேதி வரை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்/முக்கிய அறிவிப்புகள்:
* கல்வித்துறையுடன் உள்ள விளையாட்டு இளைஞர் நலன் துறை பிரிவு, தனி துறையாக துவங்கபடும்.
* புதுச்சேரியில் தேசிய சட்டப்பல்கலை கழகம் துவங்கப்பட உள்ளது. இதற்கான துவக்க விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளார்.
* 1,596 கோடி ரூபாய் மின் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
* தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பபடும். இத்துறைக்கு ரூ. 31.05 கோடி ஒதுக்கீடு.
* புதுச்சேரி கடற்பகுதியில் மிதக்கும் படகுத் துறை அமைக்கப்படும்.
* காரைக்காலில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துவங்கப்படும்.
* மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களில் உள்ள ஆவணங்கள், சொத்துக்களை டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்து பாதுகாக்கப்படும்.
* அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் நிகழாண்டு தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 2 கோடி வழங்கப்படும்.
* குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் நடத்தப்படும் குறைதீர்ப்பு கூட்டங்களுக்கு அதிகளவில் வரவேற்பு உள்ளதால், குறைதீர்ப்பு கூட்டத்தை அதிகளவில் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
* உர விற்பனை அதிகரிக்க காரைக்காலில் விற்பனை மையங்கள் அதிகரிக்கப்படும்..
* புதுவை எல்.ஆர்.பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* எந்தவிதமான அரசு உதவி தொகையும் பெறாத 21 வயது 57 வயது வரையிலான வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
* சென்னை- புதுச்சேரி இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை
* காரைக்காலில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள், சரக்கு கப்பல் சேவை
* இந்தாண்டு முதல் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்.