சென்னை ஆவடியில் முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது.
ஸ்ரீபெரும்புதூர் அருகேவுள்ள தண்டலத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில், காலை தொடங்கிய சிகிச்சை 9 மணி நேரமாக நடைபெற்றது.
ஆவடியை அடுத்த வீராபுரம், ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்-செளபாக்யா தம்பதியின் மூத்த மகள் டானியா (9). இவர் முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தார்.
இதனிடையே பொருளாதாரரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பம் என்பதால், கடந்த 6 ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து வந்தனர்.
நாள்கள் செல்லச் செல்ல டானியாவின் முகம், வலது கண், கண்ணம், தாடை, உதடு என ஒரு பக்கம் முழுவதும் சிதையத் தொடங்கியது.
அறுவை சிகிச்சைக்காக ரூ.10 லட்சம் வரை தேவைப்படுவதால், சிறுமியின் பெற்றோர் அரசின் உதவியை நாடினர். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் இளங்கோவன், துணை இயக்குநர் ஜவகர் தலைமையில் மருத்துவக் குழுவினர் சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸும் ஆய்வு நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில், சென்னை அருகேவுள்ள தண்டலத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று காலை மயக்க ஊசி செலுத்தி சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். 9 மணிநேரமாக நடைபெற்ற அறுவை சிகிச்சை முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
10 பேர் கொண்ட மருத்துவ வல்லுநர் குழு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர். முதல்வர் உத்தரவைத் தொடர்ந்து முகச்சிதைவு நோய் பாதித்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.