'மல்லிகாவின் வீடு' சிறுகதைத் தொகுப்பிற்காக எழுத்தாளர் ஜி. மீனாட்சிக்கு சாகித்ய அகாதெமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் இலக்கியத்திற்கான 2022 ஆம் ஆண்டின் பால புரஸ்கார் சாகித்ய விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் குழந்தைகள் எழுத்தாளர் ஜி. மீனாட்சியின் 'மல்லிகாவின் வீடு' எனும் சிறுகதை தொகுப்பு தேர்வாகியுள்ளது.
ஜி.மீனாட்சி பத்திரிகைத் துறையில் 27 ஆண்டு கால அனுபவம் உள்ளவர். `தினமணி', `புதிய தலைமுறை', `மங்கையர் மலர்' இதழ்களில் பணியாற்றியவர். தற்போது `ராணி' வார இதழின் ஆசிரியர்.
பஞ்சாயத்து அமைப்புகளில் பெண் தலைவிகளின் பங்களிப்புப் பற்றி எழுதிய தொடர் கட்டுரைகளுக்காக தில்லியில் உள்ள `தி ஹங்கர் புராஜெக்ட்' அமைப்பு வழங்கிய `சரோஜினி நாயுடு' விருதையும் ஈரோடு அரிமா மு.ஜீவானந்தம் இலக்கிய விருதும், கவிதை உறவு இலக்கிய விருது, லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை ஸ்ருதி வழங்கிய சாதனைப் பெண்மணி விருது, இலக்கிய வீதி அமைப்பின் அன்னம் விருது, மிகச் சிறந்த பத்திரிகையாளருக்கான நாரதர் விருது, மகாத்மா காந்தி நூலக விருது போன்ற விருதுகளைப் பெற்றவர்.
இதையும் படிக்க: கவிஞர் ப.காளிமுத்துவுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிப்பு
இம்முறை குழந்தை இலக்கியத்திற்கான சாகித்ய விருதில் பஞ்சாபி மொழி தேர்வு செய்யப்படவில்லை. விருதுக்கு தேர்வான எழுத்தாளர்களுக்கு செப்புப் பட்டயமும் ரூ. 50,000 தொகையும் வழங்கப்படும்.
விருது வழங்கும் நிகழ்வு தில்லியில் வருகிற நவம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.