தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் சுதந்திரமாக உள்ளார்கள்: உயிரிழந்த மாணவி தாயார் பேட்டி

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் சுதந்திரமாக உள்ளார்கள், பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் உள்ளோம்
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஸ்னோலினின் தாயார் வனிதா
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஸ்னோலினின் தாயார் வனிதா

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் சுதந்திரமாக உள்ளார்கள், பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் உள்ளோம் என துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் தாயார் வனிதா, காரணமானவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும், நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளிப்படையாக வெளியிட வேண்டும் தெரிவித்தார். 

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வது தொடர்பாக துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் தாயார் வனிதா மற்றும் தமிழ் மீனவர் கூட்டமைப்பின் தலைவர் வழக்குரைஞர் ரஜினி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது, சுஸ்னோலின் தாயார் வனிதா பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை காக்கா குருவி சுடுவது போல 13 பேரை சுட்டுக்கொன்றனர், இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கையில் 16 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இனி இதுபோன்ற செயல்கள் நடைபெறாத வகையில் 16 பேர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். என் மகளை இழந்து தனது குடும்பத்தினர் நித்தமும் ரத்த கண்ணீர் வடித்துவருகிறோம், வழக்குரைஞராக வேண்டும் என் ஆசையுடன் இருந்த தனது மகள் ஸ்னோலினை இழந்துவிட்டோம்.

தமிழக அரசு நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையை பொதுமக்கள் அறியும் வகையில் வெளிப்படையாக வெளியிட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருக்கும் வகையில் 16 பேர் மீதும் தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எடப்பாடி அரசிடம் முறையிட்டோம். ஆனால். அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் தங்கள் ஆட்சி வந்தால் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி எங்களை நேரில் சந்தித்தார், தற்போது முதல்வராக உள்ள அவர், துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான அனைவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், ஆடு மாடுகளை போல சூழ்ச்சி செய்து சுட்டுகொண்டவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். ஆனால், 13 பேரை இழந்தவர்கள் வேதனையுடன் இருக்கிறோம். துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், எத்தனை கோடி இழப்பீடு கிடைத்தாலும் ஈடு செய்ய இயலாது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அறிவித்த நிதி இதுவரை முறையாக வந்து சேரவில்லை, 13 பேரின் உயிர் போனதோடு மட்டுமல்லாமல், இந்த சம்பவத்தின் போது உடலுறுப்புகளை இழந்து இன்றளவிற்கும் மாற்றுத்திறனாளிகளாக துடிக்கும் நபர்களுக்கும் போதிய உதவி கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், இதனையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என வனிதா கூறினார். 

இதனைத் தொடர்ந்து பேசிய தமிழ் மீனவர் கூட்டமைப்பு தலைவர் வழக்குரைஞர் ரஜினி பேசியதாவது: 

தமிழக சட்டப்பேரவையில் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையையும், அறிக்கை மீதான நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும், நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை கசிந்தது குறித்தது தொடர்பாக அரசு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் பேச்சை தமிழ் மீனவர் கூட்டமைப்பினர் வன்மையாக கண்டிக்கிறோம், ஜெயகுமார் சமூக பொறுப்பற்ற தன்மையுடன் பேசி வருகிறார் எனவும், முறையாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை குழுவிற்கு நன்றி தெரிவித்தார். 

மேலும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியது போல சட்டப்பேரவையில் அறிக்கை மற்றும் அறிக்கை மீதான நடவடிக்கை ஆகிய இரண்டையும் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும்,வேதாந்தா நிறுவனத்தை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும், துப்பாக்கிச் சூட்டில் போது பயங்கரவாத அமைப்பு  புகுந்துள்ளதாக கூறி துப்பாக்கிச் சூட்டிற்கு ஆதரவாக பேசி திசை திருப்பிய நடிகர் ரஜினிகாந்தை வன்மையாக கண்டிக்கிறோம், ஆனால், நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் பயங்கரவாத ஊடுருவல் எதுவும் இல்லை என கூறியுள்ளனர். எனவே, துப்பாக்கிச் சூடு கொலைக்கு ஆதரவாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வழக்குரைஞர் ரஜினி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com