
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி
சசிகலா எழுத்துப் பூர்வமாக பதில் அளிப்பதாகக் கூறிவிட்டதால் அவரை நேரில் அழைக்கக் கட்டாயப்படுத்தவில்லை என ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த 600 பக்க இறுதி அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி இன்று தாக்கல் செய்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
சாட்சிகளை விசாரிப்பதில் நான் கால தாமதம் செய்ததாகக் கூறுகின்றனர். ஆனால், நான் கால தாமதம் செய்யவில்லை. இந்த ஆணையம் ஒரு நீதிமன்றம் போல செயல்படுவதாக உச்சநீதிமன்றமே கூறியுள்ளது.
ஜெயலலிதா இறந்ததற்கு முன்பு இருந்த உடல்நிலை, அவரின் பழக்கவழக்கங்கள், அவரை யார் கவனித்துக் கொண்டார்கள் என அனைத்தும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணை எனக்கு திருப்திகரமாக உள்ளது.
இதையும் படிக்க | ஜெயலலிதா மரணம்: முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தார் நீதிபதி ஆறுமுகசாமி
சசிகலா விஷயத்தில் அவர் எழுத்துப் பூர்வமாக பதில் அளிப்பதாகக் கூறிவிட்டதால், ஒருவரை கட்டாயப்படுத்துவது சரியாக இருக்காது. சசிகலா தரப்பு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
விசாரணையில், மனுதாரர் உள்பட 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சந்தேகங்கள் குறித்த அனைத்து தகவல்களும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதில் எந்த சந்தேகமுமில்லை.
எய்ம்ஸ் மருத்துவக் குழுவைப் பொருத்தவரை ஜெயலலிதா இறந்து 3 மாதங்களுக்குப் பிறகே முதல் அறிக்கையை அளித்தனர்.
விசாரணையில் சாட்சியங்கள் குறித்து மட்டுமே எழுதியிருக்கிறேன். என்னுடைய தனிப்பட்ட விஷயங்கள் எதுவும் இல்லை' என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...