
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த 600 பக்க இறுதி அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி வழங்கினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
விசாரணைக்கு முதலில் மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், கால அவகாசம் இதுவரை 14 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையால், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் குழு உதவியுடன் விசாரணையை மீண்டும் தொடர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, 2022 மார்ச் 7 முதல் ஆறுமுகசாமி ஆணையத்தில் மீண்டும் விசாரணை தொடங்கியது. முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினா்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் என மொத்தம் 159 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது.
தற்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல்வரை நேரில் சந்தித்து அறிக்கையை வழங்கினார்.
இதையும் படிக்க | உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்பு
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...