சீர்காழி அருகே மடவாமேடு கிராமத்தில் புயல் மற்றும் கடல் சீற்றத்தால் கடல் உட்புகுந்ததை ஆய்வு செய்ய சென்ற கிராம நிர்வாக அலுவலர் பவளச்சந்திரன் படுகாயம் அடைந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. அலை எழுச்சியின் காரணமாக நான்கு கடலோர கிராமங்களில் கடல் நீர் புகுந்து குடியிருப்புகளை தண்ணீர் சுழ்ந்துள்ளது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீர்காழி தாலுகா மடவாமேடு கிராமத்தில் புயல் மற்றும் கடல் சீற்றத்தின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் , புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பவளச்சந்திரன் உடன் சென்றனர்.
இதையும் படிக்க | புயல் கரையை கடக்கும் போது மக்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை?
அப்போது, கடற்கரையோரம் ஆய்வு மேற்கொண்ட போது கடல் சீற்றத்தின் காரணமாக ஏற்பட்ட அலையில் அடித்து வந்த மரக்கட்டை மோதி மூர்த்தி மற்றும் பவளச்சந்திரன் காயமடைந்து அலையில் தாடுமாறி விழுந்தனர். இதில் காயமடைந்த கிராம நிர்வாக அலுவலரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனால் மடவாமேடு கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.