தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரண நிதியை கனிமொழி இன்று வழங்கினார்.
தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரிய போராட்டத்தின் போது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது விவாதம் சட்டப் பேரவையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வீதம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதையும் படிக்க- காஷ்மீருக்கு விரைவில் ரயில் சேவை
இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.65 லட்சத்தை முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரண நிதியை கனிமொழி இன்று வழங்கினார். இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.