கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை அறநிலை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் துறை அமைச்சர் சேகர் பாபு இன்று ஆய்வு செய்தார்.
பண்டிகை காலங்களில் சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளை, வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கும் வகையில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டிருக்கும் இந்த பேருந்து நிலையம் கட்டுமானப் பணி கடந்த 2019ஆம் தேதி பணி துவங்கப்பட்டது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் சேகர் பாபுவுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும துறை நேற்று வழங்கப்பட்ட நிலையில், இன்று கிளாம்பக்கம் பேருந்து நிலையத்தில் இன்று காலை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சேகர் பாபு பேசியதாவது:
கிளாம்பக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு மக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகள், போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
சுமார் 88 ஏக்கரில் அமையவுள்ள இந்த பேருந்து நிலையத்தில் மாநகரப் பேருந்துகள், வெளியூர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் என 250க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தப்படவுள்ளது.
பேருந்து திறப்பதற்கான குறிப்பிட்ட தேதியை தற்போது நிர்ணயிக்க முடியாது. புயல், வெள்ளத்தால் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தாமதம் ஏற்பட்டது. பேருந்து நிலைய பணிகளை விரைவாக முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய ஆய்வில், பல்வேறு புதிய பணிகளை ஏற்படுத்த அதிகாரிகள், அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளதால், அந்த பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது.
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, கோயம்பேடு, கிளாம்பாக்கம் போன்ற பேருந்து நிலையங்கள் போல், இன்னும் 2 அல்லது 3 அமைத்தால் தான் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.