தில்லியில் டிசம்பர் 24ஆம் தேதி ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.
கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாககுழு, செயற்குழு & மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை நோக்கிய சில முக்கிய முடிவுகளை கமல்ஹாசன் தெரிவித்தார்.
மேலும் தேர்தல் வியூகம் & கட்சி செயல்பாடுகள் குறித்து ஆலோசனையும் வழங்கினார். அப்போது ராகுல் காந்தியின் அழைப்பின் பெயரில் பாரத் ஜோடோ யாத்திரையில் வரும் 24-ஆம் தேதி, தில்லியில் கலந்து கொள்ளப்போவதாக கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
மேலும் அவருடன் பெருந்திரளாக கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொள்ள இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், எனது பயணத்தை புரிந்து கொண்டாலே கூட்டணி தொடர்பாக நான் எந்த திசையில் செல்கிறேன் என்பது புரியும்.
தமிழ்நாடு முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளேன். பல முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டன. பூத் கமிட்டி தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது என்றார்.