திருச்சி விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
2021 ஆகஸ்ட் 5ஆம் தேதி மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் முதல் நபருக்கு மருத்துவ பெட்டகம் வழங்கி அத்திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
அத்திட்டத்தின் மூலம் தொடர்ந்து மக்கள் பயனடைந்து வந்த நிலையில், அது தற்போது ஒரு கோடியை எட்டியிருக்கிறது. இதற்காக ஒரு கோடியாவது பெட்டகத்தைப் பெறும் நபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் சன்னாசிப்பட்டியை சேர்ந்த அந்த நபருக்கு மருத்துவ பெட்டகத்தை முதலமைச்சர் வரும் 29 ஆம் தேதி நேரில் வழங்க உள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே கரோனா தாக்கம் ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது. கடந்த ஏழு, எட்டு மாதங்களாக உயிரிழப்புகளும் இல்லாத நிலை தான் உள்ளது. அதற்கு காரணம், தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றியதுதான். தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசியை 96 சதவீதம் பேரும் 2வது தவணை தடுப்பூசியை 92 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளனர். அதனால் மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்துள்ளது.
கரோனா மரபணு சோதனை மேற்கொள்ள ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதற்கான பிரத்யேக் ஆய்வகம் சென்னையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தொடர்ந்து கரோனா மரபணு மாற்றத்தைக் கண்காணித்து வருகிறோம். கரோனா குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
சீர்காழியைச் சேர்ந்த 13 வயது மாணவி அபிநயா தோல் அழுகல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அதுகுறித்து அபிநயா முதல்வருக்கு கோரிக்கை வைத்த விடியோ வைரலானது. அது எங்கள் கவனத்திற்கு வந்த பின்பு அபிநயாவை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வாத நோய் பிரிவில் அனுமதித்துள்ளோம். சிறப்பு சிகிச்சையளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரை இன்று மதியம் நேரில் சென்று சந்தித்து விசாரிக்க உள்ளேன். மாணவி அபிநயாவிற்கு உரிய சிகிச்சை வழங்கப்படும்.
பத்திரிக்கை, ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் இதுபோன்று கோரிக்கைகள் வரும்பட்சத்தில் அவை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 2019-ல் எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையில் தான் தற்போதும் உள்ளது. விரைவாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட வேண்டும் கோவையில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
2024 தேர்தலை மையப்படுத்தி ஒன்றிய அரசு மருத்துவமனையைக் கட்ட முயற்சித்தாலும், தேர்தலுக்காகச் செய்தாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.