சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு, மின் வாரியத்தின் மாத வருவாய் ரூ.1,000 கோடியாக அதிகரித்திருப்பதாகவும், ஆனாலும், திட்டமிட்டதைவிடவும் இது சற்றுக் குறைவுதான் என்றும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக மின்வாரியத்துக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.19,000 கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால், தற்போதுவரை சில கட்டணங்களை நாங்கள் சில பிரிவுகளுக்கு அறிவிக்கவில்லை. தற்போதைக்கு மாதத்துக்கு மின்வாரியத்துக்கு வருவாய் ரூ.1,000 கோடியாக உள்ளது என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. ரூ.60 கோடி சொத்துக்காக.. மனைவிகளைக் கொன்ற சகோதரர்கள்
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுவரை 34,134 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொங்கலுக்குள் 50 ஆயிரத்தை எட்டிவிடும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைப்பதற்காக டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களை மின் நுகர்வோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதுவரை 1.20 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்டது. இன்னும் 2.67 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டியுள்ளது என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணியால், மாதந்தோறும் மின் கட்டணம் அளவிடும் முறை நடைமுறைக்கு வருவதில் தாமதமாகிறது. எனவே, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மின் வாரியத்துக்கு மாத வருவாய் இதுவரை 7 கோடியாக இருந்தது. தற்போது இது 13.71 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.