கரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சீனா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில வாரங்களாக கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருகின்றது. சீனாவில் பரவி வரும் பிஎஃப் 7, பிஎஃப் 12 என்ற ஒமைக்ரான் திரிபு வகை கரோனா வைரஸ்கள் குஜராத், ஒடிஸா மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், கரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.
தமிழகத்தில் இதுவரை புதிய வகை கரோனா வைரஸ் இல்லை. மருந்துகள், பரிசோதனை வசதிகள், ஆக்சிஜன் ஆகியவை போதுமான அளவில் உள்ளன.
பிஏ5 என்ற கரோனா தொற்று கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கண்டறியப்பட்ட நிலையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கரோனா அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும். மக்களைப் பாதுகாக்கக அரசு தயாராக உள்ளது' என்று பேசியுள்ளார். .