தமிழகத்தில் இருந்து விலை உயர்ந்த போதைப் பொருட்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் கடத்தப்படுவதாக அதிமுக இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கஞ்சாவை வயது வித்தியாசம் இல்லாமல் 18 வயதுக்குட்பட்ட மைனர் சிறுவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு, நான்கு பேர் அடங்கிய கஞ்சா போதை கும்பல், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஆங்காங்கே உள்ள கடைகளில் நுழைந்து, கடை உரிமையாளர்களை கத்தி மற்றும் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி அவர்களைத் தாக்கி, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலில் சுமார் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒருவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கஞ்சா எங்கிருந்து கடத்தப்பட்டு வருகிறது? இதுவரை முழுமையாக கண்டுபிடிக்க முடியாதது ஏன்? கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? போதைப் பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கைதுசெய்ய தடுப்பவர்கள் யார்? கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்காது என்பதில் ஐயமில்லை. மேலும் தமிழகமெங்கும் பல இடங்களில் காவல் நிலைய மரணங்கள் மற்றும் காவலர்கள் தாக்கியதால் மரணங்கள் நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஒருசில காவலர்களின் அதிகார வரம்பு மீறல்களினால் இதுபோன்ற நிலை தொடருமானால், புகார் கொடுக்கக்கூட பொதுமக்கள் காவல் நிலையம் செல்ல அஞ்சுவார்கள்.
தமிழகம் முழுவதும் ஒருபுறம் திமுக அரசின் காவல் துறையினர் குற்றம்சாட்டப்பட்வர்களிடம் முறையாக விசாரிக்காமல் அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைக்கும் அதே நேரத்தில், இந்த சமுதாயத்தை சீரழிக்கக்கூடிய போதைப் பொருள் வியாபாரிகளை சுதந்திரமாக நடமாட விட்டுக்கொண்டிருக்கிறார்கள். கஞ்சா உள்பட பல போதைப் பொருட்கள் தாராளமாக விற்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து விலை உயர்ந்த போதைப் பொருட்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன. இனியாவது காவல் துறையினரை தங்களது ஏவல் துறையாக பயன்படுத்தாமல், சட்டம்-ஒழங்கையும், குற்றச் செயல்களையும் கட்டுப்படும் வகையில் அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று இந்த திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.