சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழா புதன்கிழமை (டிச.28) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து புதன்கிழமை காலை 7 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் சு.ரா.நடராஜகுஞ்சிதபாத தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து 10 நாட்கள் பஞ்சமூர்த்தி வீதிஉலா உற்சவம் நடைபெறுகிறது.
இதையும் படிக்க | பொங்கல் தொகுப்பு: டிச. 30 முதல் டோக்கன் விநியோகம்
ஜனவரி 5-ஆம் தேதி வியாழக்கிழமை தோ்த் திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 6-ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு மகாபிஷேகமும் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூா்த்திகள் வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் மார்கழி ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறும். 7-ஆம் தேதி சனிக்கிழமை பஞ்சமூா்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாள்களில் தினமும் பஞ்ச மூா்த்திகள் வீதி உலாவும், மாலை 6 மணியளவில் சாயரட்சை பூஜையில் சித் சபை முன் மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து திருவெம்பாவை உற்சவமும் நடைபெறும்.
உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் குழுச் செயலாளர் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதர், துணைச் செயலாளர் கே.சேதுஅப்பாச்செல்ல தீட்சிதர் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.