புதுச்சேரி: புதுவையில் மின்துறை தனியார்மயத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அத்துறை ஊழியர் சங்க பிரதிநிதிகளை, மின்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுவை மின்துறையை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்துறை ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் புதுவை மாநில மின்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம், புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, புதுவை மின்துறை தனியார்மயத்தை மத்திய அரசு கைவிட வேண்டும், அதற்காக புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் விரிவாக அவர்கள் விளக்கினர்.
அவர்களது கோரிக்கைகளைக் கேட்டு அறிந்த அமைச்சர் நமச்சிவாயம், இது தொடர்பாக முதல்வர் என். ரங்கசாமி முன்னிலையில் புதன்கிழமை அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இதனால், இந்த பேச்சுவார்த்தையில், எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.