தமிழகத்திற்கான புதிய வழித்தடத்திட்டங்கள் மீண்டும் புறக்கணிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

தமிழகத்திற்கான புதிய வழித்தடத்திட்டங்கள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கான புதிய வழித்தடத்திட்டங்கள் மீண்டும் புறக்கணிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

தமிழகத்திற்கான புதிய வழித்தடத்திட்டங்கள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து ரயில்வே திட்ட புத்தகம் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

அதில் தமிழகத்துக்கான புதிய வழித்தடத் திட்டங்களான திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை; திண்டிவனம்-நகரி; அத்திப்பட்டு-புத்தூர்; ஈரோடு-பழனி; சென்னை-கடலூர்; மதுரை-தூத்துக்குடி அருப்புக்கோட்டை வழியாக; ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி-இருங்காட்டுக்கோட்டை-ஆவடி; மொரப்பூர்-தர்மபுரி ஆகிய எட்டு புதிய வழித்தடத்திட்டங்களுக்கு இந்தி நிதிநிலை அறிக்கையிலும் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளத்தை வன்மையாக கண்டிக்கிறேன். 

ராமேசுவரம்-தனுஷ்கோடி புதிய வழித்தடத்திட்டதிற்கு ரூ.207 கோடி தேவை. அதற்கு ரூ.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதை வரவேற்கிறேன். 

கட்பாடி-விழுப்புரம் இரட்டை பாதை திட்டத்திற்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம்-கரூர்-திண்டுக்கல் இரட்டை பாதை திட்டத்திற்கு ரூ.1,600 கோடி தேவை. ஆனால் வெறும் ஒன்றரை கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஈரோடு-கரூர் இரட்டை பாதை திட்டத்திற்கு ரூ.650 கோடி தேவை. ஒதுக்கப்பட்டுள்ளது வெறும் ஒரு கோடி. தொடர்ந்து மூன்றாவது நிதிநிலை அறிக்கையாக இப்படி மிகக் குறைந்த தொகையை தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மதுரை-வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி இரட்டை பாதை திட்டமும் கன்னியாகுமரி-நாகர்கோவில் திருவனந்தபுரம் இரட்டை பாதை திட்டமும் தொடர்ந்து காலதாமதமானது. இது குறித்து பல முறை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். தொடர்ந்து கடந்த ஆண்டு கடும் எதிர்வினையாற்றினோம்.

அதன் தொடர்ச்சியாக இப்பொழுது மதுரை-வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி இரட்டை பாதையில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாஞ்சி மணியாச்சி-நாகர்கோயில் திட்டத்திற்கு ரூ.1700 கோடி தேவை. இதுவரை ரூ.750 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ.360 கோடியும், வரும் ஆண்டில் ரூ.425 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. திட்டம் விரைந்து  முடிவடைய நவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

மதுரை போடியாகனூர் அகல ரயில் பாதை திட்டம் பத்தாண்டுகளுக்கு மேலாக தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இது பற்றி பலமுறை முறையீடு செய்ததன் தொடர்சியாக நடப்பாண்டு(2021-22) ரூ.104 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுக்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  எங்களது தொடர்ந்த கோரிக்கைக்கு செவிமடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இரட்டை பாதை திட்டத்திற்கு ரூ.900 கோடி முதலீடு செய்ய வேண்டும். இதுவரை ரூ.250 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ.700 கோடியும், அடுத்த ஆண்டுக்கு ரூ.400 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த திட்டங்களை இரண்டு ஆண்டுகளில் முடிக்க மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இந்தத் திட்டம் முடிவடைந்தால் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும் தூத்துக்குடிக்கும் இரட்டை பாதை முடிவடைந்து போக்குவரத்து இலகுவாகும்.

தமிழக புதிய வழித்தடத் திட்டங்களுக்கும் புதிதாக சேர்க்கப்பட்ட இரட்டை பாதை திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசை மீண்டு வலியுறுத்துகிறேன் என்று சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com