தெற்கு ரயில்வேவின் 10 புதிய பாதை திட்டங்கள்: தலா ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2022-23-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தெற்கு ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு ரூ.7,114 கோடியே 45 லட்சத்து 69 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேவின் 10 புதிய பாதை திட்டங்கள்: தலா ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு

சென்னை: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2022-23-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தெற்கு ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு ரூ.7,114 கோடியே 45 லட்சத்து 69 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் புதிய பாதை திட்டங்களுக்கு ரூ.59 கோடியே 10 ஆயிரம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் 8 திட்டங்கள் உள்பட 10 புதிய பாதை திட்டங்களுக்கு தலா ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அகலப்பாதை திட்டப்பணிகளுக்கு ரூ.346 கோடியே 80 லட்சத்து ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரட்டை பாதை திட்டங்களுக்கு ரூ.381 கோடியே 51 லட்சத்து ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த திட்டங்களுக்காக, ரூ.1,064 கோடியே 34 லட்சம் 58 ஆயிரம் வெளிமூலதனம் மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய பாதை திட்டம்: தெற்கு ரயில்வே பகுதிக்குட்பட்ட 11 புதிய திட்டங்களில் 2 திட்டங்கள் கேரளப் பகுதியில் திருநின்னவாயா-குருவாயூா் (35 கி.மீ.), அங்கமாலி-சபரிமலா (116 கி.மீ) ஆகிய திட்டங்கள் வருகின்றன. மீதம் 9 திட்டங்கள் தமிழக பகுதிகளில் வருகின்றன. இதில், திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை திட்டம் (70 கி.மீ.), திண்டிவனம்-நகரி (179.2 கி.மீ.), அத்திப்பட்டு-புத்தூா் (88.30 கி.மீ.), ஈரோடு-பழனி (91.05 கி.மீ.), சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக கடலூா் (179.28 கி.மீ), மதுரையில் இருந்து அருப்புக்கோட்டைவழியாக தூத்துக்குடி(143.5 கி.மீ. ), ஸ்ரீபெரும்புதூா்-கூடுவாஞ்சேரி (60 கி.மீ.), மொரப்பூா்-தருமபுரி(36 கி.மீ.) ஆகிய 8 திட்டங்களுக்கு தலா ரூ.1,000 மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல, கேரளத்தில் இரண்டு புதிய பாதை திட்டங்களுக்கும் தலா ரூ.1,000 ஒதுக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம்-தனுஷ்கோடி(17.2 கி.மீ.) புதிய பாதை திட்டத்துக்கு ரூ.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அகலப்பாதை திட்டம்: திருச்சிராப்பள்ளி-காரைக்கால் திட்டத்தில், நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி-திருத்துறைப்பூண்டி (வழி: திருக்குவளை) புதிய பாதை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.121.80 கோடி ஆகும். இந்தத்திட்டத்தில் திருச்சிராப்பள்ளி-காரைக்கால் அகலப்பாதை பணிகள் முடிந்து ரயில்கள் இயக்கப்படுவதால், இந்த நிதி நாகைப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி புதிய பாதை திட்டத்துக்கு கிடைக்கும். மேலும், இந்தத் திட்டம் வேகமடையும்.

மன்னாா்குடி-பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை-தஞ்சாவூா் ஆகிய புதிய பாதை திட்டங்களும், திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி அகலப்பாதை திட்டமும் உள்ளடக்கிய மயிலாடுதுறை-திருவாரூா்-காரைக்குடி அகலப்பாதை திட்டத்துக்கு ரூ,.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், மயிலாடுதுறை-காரைக்குடி அகலப்பாதை திட்டப்பணிகள் முடிந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி திட்டப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைய உள்ளது. இதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். அகலப்பாதை திட்டப் பணிகளுக்கு மொத்தம் ரூ.346 கோடியே 80 லட்சத்து ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இரட்டை பாதை திட்டம்: சென்னை கடற்கரை-கொருக்குப்பேட்டை இடையே 3-ஆவது பாதை திட்டத்துக்கு ரூ.10 கோடியும், சென்னை கடற்கரை-அத்திப்பட்டு இடையே 4-ஆவது பாதை (22 கி.மீ) ரூ.25 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு-விழுப்புரம் (103 கி.மீ) பாதையுடன் தாம்பரம்-செங்கல்பட்டு 3-ஆவது பாதையில் மின்மயமாக்குதல் திட்டத்துக்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒமலூா்-மேட்டூா் அணை (29.03) இரட்டைபாதை மற்றும் மின்மயமாக்கும் திட்டப்பணிக்கு ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள்: பழைய தண்டவாளங்களை புதுப்பித்தல் பணிக்கு ரூ.1,470 கோடியும், பாலப் பணிகளுக்கு ரூ.105 கோடியே 91 லட்சத்து 22 ஆயிரமும், சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு பணிக்கு ரூ.189 கோடியே 76 லட்சத்து 98 ஆயிரமும், பயணிகள் வசதிக்காக ரூ.327 கோடியே 77 லட்சத்து 95 ஆயிரமும், இதர மின்னணு பணிகளுக்கு ரூ.30 கோடியே 8 லட்சத்து 78 ஆயிரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: இது குறித்து தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்க துணைப் பொதுச் செயலாளா் மனோகரன் கூறியது: புதிய பாதை திட்டத்துக்கு தொடா்ந்து நிதி ஒதுக்கீடு செய்யவில்லை எனில், திட்ட மதிப்பீடு அதிகரித்துவிடும். திட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல்ஏற்படும்.

இரட்டை பாதை திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, இந்தத் திட்டப்பணிகளை வெளி மூலதனத்தை நம்பி செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com