பிப்ரவரி 16 ஆம் தேதி தொடங்கவுள்ள சென்னை புத்தகக் காட்சிக்கு நாளை(பிப்.6) முதல் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
ஜனவரியில் நடைபெறவிருந்த புத்தக கண்காட்சி, கரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை புத்தகக் கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பிப்ரவரி 16ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை 45-வது புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.
மேலும், சென்னை புத்தகக் காட்சியை நடத்துவதற்கு கரோனா விதிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | சென்னை புத்தகக் காட்சி: கரோனா தடுப்பு விதிகள் விவரம்
இதில், கண்காட்சியில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி நுழைவுச்சீட்டு கொடுக்கலாம் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னை புத்தகக் காட்சிக்கு நாளை(பிப்.6) முதல் https://bapasi.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) அறிவித்துள்ளது.
வரிசையில் நின்று டிக்கெட் பெறுவதைத் தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நுழைவுக் கட்டணம் ரூ. 10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பபாசி தெரிவித்துள்ளது.
முன்னதாக, பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் சென்னை புத்தகக் காட்சியை நடத்த அனுமதி வேண்டும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்தினா் (பபாசி) முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | சென்னை புத்தகக் காட்சி: முதல்வருடன் பபாசி நிா்வாகிகள் சந்திப்பு