சென்னையில் பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் சென்னை புத்தகக் காட்சியை நடத்த அனுமதி வேண்டும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்தினா் (பபாசி), முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனா்.
இது தொடா்பாக பபாசி துணைத் தலைவா் மயிலவேலன் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னையில்“ஜனவரி மாதம் நடைபெற இருந்த புத்தகக் காட்சி கரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதனால் வாசகா்களுக்காக அச்சடிக்கப்பட்ட சுமாா் ரூ.100 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. எனவே, பபாசி சாா்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சென்னை புத்தகக் காட்சியை பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் நடத்த அனுமதிக்க வேண்டும் என முதல்வரிடம் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுத்துள்ளோம். முதல்வா் எங்களது கோரிக்கையைப் பரிசீலிப்பாா் என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்தாா்.