திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்தான் இந்த உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், மகத்தான வெற்றி அளித்த மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றியும் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் வெற்றி அடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் மகத்தான வெற்றி பெற்றதற்கு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாபெரும் வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு தரப்பட்ட ஒதுக்கீட்டால், சமூகத்தில் சரிபாதி பெண்கள் பொறுப்புகளுக்கு வந்துள்ளார்கள்.
இது திராவிட மாடல் புரட்சி. கடந்த 9 மாத கால திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள நற்சான்றுதான் இந்த வெற்றி; திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்துள்ள அங்கீகாரமாக இதைப் பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.