‘ஆளுநர் பதவி விலக வேண்டும்’: நீட் தேர்வு விவகாரத்தில் திமுக எம்பி டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரும் விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
‘ஆளுநர் பதவி விலக வேண்டும்’: நீட் தேர்வு விவகாரத்தில் திமுக எம்பி டி.ஆர்.பாலு வலியுறுத்தல்
‘ஆளுநர் பதவி விலக வேண்டும்’: நீட் தேர்வு விவகாரத்தில் திமுக எம்பி டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரும் விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் மசோதா மீது ஆளுநர் ஆர்.என்.ரவி நடவடிக்கை எடுக்காமல் உள்ளது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு சந்திக்க முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் பல்வேறு காரணங்களால் அந்த சந்திப்பு நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் இன்று தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க சென்ற தமிழக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, “தமிழக அரசு நிறைவேற்றிய நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை ஆளுநர் இதுவரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை. இது அரசியல் சட்டத்திற்கு புறம்பானது. ஆளுநர் அரசியல் சட்டத்தை குழிதோண்டி புதைத்துள்ளார். மேலும் நீட் தேர்வுக்கு எதிரான மசோதா மீது நடவடிக்கை எடுக்கக் கோருவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க முயன்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி தராமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. கடந்த 10 நாள்களாக மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க முயற்சித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும்” எனத் தெரிவித்தார்.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக ஆளுநர் பதவி விலக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கோரியுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தொல்.திருமாவளவன், நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com