தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிறன்று ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதற்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஆணை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவுப்படி ஜனவரி 10 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.
இதையும் படிக்க.. மீண்டும் முதலிலிருந்தா? கரோனா அபாயப் பகுதியாக மாறும் மண்டலம்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தத் தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும் மற்றும் அவசியம் ஏற்படின் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, பிரிவு 144-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உலக அளவில், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கரோனா நோய்த் தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், புது தில்லி, கேரளம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் கரோனா தொற்று குறைந்து மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கம், புது தில்லி, கேரளம், கர்நாடக மாநிலங்களில் வேகமாகப் பரவி வரும் கரோனா நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கரோனா நோய்த் தொற்று வெகுவாகக் குறைந்து 27.12.2021 அன்றைய நாளில் 605 ஆக இருந்தது. பொது இடங்களில் கரோனா நோய்த் தடுப்பு நடைமுறைகளை முறையாக கடைபிடிக்காததன் காரணத்தினால் தமிழ்நாட்டில் தற்போது கரோனா நோய்த் தொற்று அதிகரித்து 3.1.2022 அன்று 1728 ஆக உள்ளது.
இதையும் படிக்க.. சூடான நீரில் குளிப்பதால் இத்தனை பிரச்னைகளா?
இந்நிலையில், கரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்தத் தவறினால் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் தலைமையில் 4.1.2022 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் மற்றும் பொது மக்கள் நலன் கருதியும் புதிய கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.