சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் திறக்கப்பட்டது.
மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் நடைபெற்ற வைகுந்த ஏகாதசி விழாவை முன்னிட்டு உற்சவர் சுந்தரராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்று ஸ்ரீதேவி பூதேவி சமேதமாய் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோயில் மண்டபத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து காலை 5:30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டதும் சுந்தரராஜ பெருமாள், கோயில் மண்டபத்திலிருந்து பரமபதவாசல் வழியாக புறப்பாடாகி வந்தார்.
அதன்பின் கோயில் உள்பிரகாரத்தில் பரமபத வாசலில் காத்திருந்த நம்மாழ்வர் பெருமானுக்கு சுந்தரராஜ பெருமாள் காட்சி தந்தார். பரமபத வாசலில் புறப்பாடாகி வந்த பெருமாளுடன் வந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர். அதன்பின் சுந்தரராஜ பெருமாள் கோயில் உள் பிரகாரத்தை வலம் வந்து சௌந்தரவல்லித் தாயார் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நம்மாழ்வார் பெருமான் சுந்தரராஜ பெருமாள் மூலவர் சன்னதியில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுந்தரராஜ பெருமாளை தரிசனம் செய்தனர். மானாமதுரை புரட்சியார் பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தியாக வினோதப் பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இங்கும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.