திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே விரைவு ரயிலில் சிக்கிய இருசக்கர வாகனம் 3 கி.மீ தூரத்திற்கு இழுத்துச் சென்றதால் ரயில்கள் 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
சென்னை சென்ட்ரலில் இருந்து சனிக்கிழமை இரவு 8.55 மணிக்கு புறப்பட்டு ஆலப்புழா நோக்கி சென்று கொண்டிருந்தது ஆலப்புழா விரைவு ரயில். அப்போது, திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை ரயில்வே கேட் பகுதியில் விரைவு ரயில் வருவதை அறியாமல் வந்த நபர் தனது இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்றராம்.
இதையடுத்து திடீரென விரைவு ரயில் அருகில் வந்ததால் அதிர்ச்சி அடைந்த நபர் இரு சக்கர வாகனத்தை தண்டவாளத்தில் விட்டுவிட்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரயிலுக்கு அடியில் சிக்கிய இருசக்கர வாகனம் சுமார் 3 கி.மீ தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது. பின்னர் புட்லூர் ரயில் நிலையம் செல்லும் போது ரயில் இயந்திரத்தின் அடிப்பகுதியில் உராயும் சத்தம் வந்துள்ளதை ரயில் ஓட்டுநர்கள் உடனே ரயில் நிலையத்தில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, இயந்திர அடிப்பகுதியில் இருசக்கர வாகனம் சிக்கியிருந்ததை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகினர்.
ரயில் இயந்திர அடிப்பகுதியில் சிக்கிய இருசக்கர வாகனம்.
இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் வந்து ரயிலுக்கு அடியில் சுக்குநூறாக உடைந்த இருசக்கர வாகனத்தை சுத்தியல் கொண்டு உடைத்து 2 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்டனர். அப்போது, இதற்கு உதவிய புட்லூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களை ரயில்வே அதிகாரிகள் வெகுவாக பாரட்டினர்.
இதனால் ஆலப்புழா விரைவு ரயில் 2 மணி நேர தாமதத்திற்கு பின் தாமதமாக புட்லூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக சனிக்கிழமை இரவு சென்ட்ரலில் இருந்து செல்லும் ரயில்கள் சுமார் 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரயில் தண்டவாளத்தில் ரயில் வரும் போது இருசக்கர வாகனத்தை விட்டுச் சென்ற உரிமையாளர் யார் என்பது, வாகன எண்ணை வைத்து ரயில்வே நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | முழு பொது முடக்கம்: எடப்பாடி பகுதியில் முக்கிய சாலைகள் வெறிச்சோடின