வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்களை தாக்கிய இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் மீன்பிடி வலைகள் உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு விரட்டியடித்த நிலையில், மேலும் ஒரு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 8 மீனவர்கள் திங்கள்கிழமை கரை திரும்பினர்.
புஷ்பவனம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (45), நாகமுத்து (46), ராஜேந்திரன்(55). ஞாயிற்றுக்கிழமை பகல் கண்ணாடியிழைப் படகு ஒன்றில் சென்ற இவர்கள் மூவரும் அன்று இரவு 11 மணிக்கு கோடியக்கரைக்கு தென்கிழக்கே 8 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு இலங்கை படகில் அங்கு வந்த அந்தநாட்டைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், படகில் ஏறி மீனவர்களை கம்பால் தாக்கியுள்ளனர். இதில்,காயமடைந்திருந்த மூவரும் வேதாரண்யம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில்,புஷ்பவனம் கிராமத்தில் இருந்து மீன்பிடிக்கக்க விசைப் படகில் சென்ற சென்ற 8 மீனவர்கள் வேதாரண்யத்துக்கு அப்பால் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதில்,இதில் புவனேஷ்வர், தமிழ்செல்வம் ஆகிய இரு மீனவர்களுக்கு உள்காயம் ஏற்பட்டது.
மேலும், மீனவர்களை படகில் முட்டிகால் போட வைத்து படகில் இருந்த இன்வேட்டர் - 1, பேட்டரி 1, ஜிபிஎஸ் கருவி - 1, தூண்டில்கள் ,டார்ச் லைட் -2 , டீசல் 20 லிட்டர், பிடித்து வைத்திருந்த சீலா உள்பட ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மீன்களை பறித்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிக்க | நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்
பாதிக்கப்பட்ட மீனவர்கள் திங்கள்கிழமை பகல் புஷ்பவனம் மீனவ கிராமத்திற்கு கரை திரும்பினர்.
இந்த நிலையில், கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை முன்னாள் அமைச்சரும், தொகுதியின் எம்எல்ஏவுமான ஓ.எஸ்.மணியன் திங்கள்கிழமை நேரில் சென்று விசாரித்தார்.
பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழக மீனவர்கள் கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவது அண்மைக்காலமாக தொடர் சம்பவமாக உள்ளது. இதனால்,மீனவர்கள் கடலுக்குள் செல்வதற்கே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இது வேதனையாக உள்ளது.
இந்த சம்பவத்தை தடுத்து நிறுத்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் இலங்கை அரசுடன் பேசவேண்டும். இந்த தொடர் சம்பவத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளை தெரிவிக்கவேண்டும். அப்போதுதான் மீனர்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும் என்றார் ஓ.எஸ்.மணியன்.