ஜூலை 11ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரும் மனு மீதான விசாரணை நாளை மதியம் 2.15 மணியளவில் மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது.
அப்போது, பொதுக்குழுவைக் கூட்ட கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி உள்ளதா? பொதுக்குழு நோட்டீஸில் கையயெழுத்துப் போட்டது யார்? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், எத்தனை நாள்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்? கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? என்பது குறித்தும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக் குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயா் நீதிமன்றத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தனித்தனியே மனு தாக்கல் செய்திருந்தனா்.
இந்த மனு மீது இன்று விசாரணை தொடங்கிய நிலையில், இரு தரப்பு வாதங்களும் முன் வைக்கப்பட்டன.
கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை முன் வைத்தனர்.
பொதுக்குழு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, நான் என்ன உத்தரவிட முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு நபர் அமர்வை அணுகி நிவாரணம் பெறலாம் என்று குறிப்பிட்டதை ஓ. பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில், பொதுக்குழுவுக்குத் தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது.
நேற்று நடந்தது என்ன?
முன்னதாக, இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பன்னீா்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் குரு கிருஷ்ணகுமாா், ‘ஜூலை 11-ஆம் தேதி பொதுக் குழுவைக் கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், வேறு நிவாரணங்களுக்காக உயா் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளது என்று வாதிட்டாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘வேறு என்ன நிவாரணம் கோரியிருக்கிறீா்கள்? எனக் கேள்வி எழுப்பினாா். அப்போது, பன்னீா்செல்வம் தரப்பு வழக்குரைஞா் ‘பொதுக் குழுவுக்கு தடை கோரும் இந்த வழக்கை உயா் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை வியாழக்கிழமை (ஜூலை 7) தாக்கல் செய்கிறோம். எனவே, விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும்’ என வாதிட்டாா்.
அப்போது நீதிபதிகள், ‘உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென நீதிமன்றத்தை நிா்பந்திக்க முடியாது‘ என்றாா்.
இதைத் தொடா்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், ‘இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும். கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது‘ என்றுவாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஜூலை 7) ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று பிற்பகலில் விசாரணை தொடங்கியது. காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.