கூடலூர்: கூடலூர் பாரத ஸ்டேட் வங்கி அருகே உள்ள நூலக கட்டடத்தின் முன்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவை இரண்டாவது நாளாக அகற்றப்படாததால் வாகன நெரிசல் அதிகமுள்ள குறுகிய சாலையில் பொதுமக்கள் நடந்து செல்கின்றனர்.
நீலகிரியில் தென்மேற்குப் பருவ மழை தொடா்ந்து வலுத்து வரும் நிலையில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும், தொடர் கனமழையால் பரவலாக வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. உதகை - கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நடுவட்டம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த செவ்வாய் இரவு பெய்த கன மழைக்கு கூடலூர் பாரத ஸ்டேட் வங்கி அருகே உள்ள நூலக கட்டடத்தின் முன்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் அந்த பகுதியில் உள்ள நடைபாதை பாதை தடைபட்டதால் வாகன நெரிசல் அதிகமுள்ள குறுகிய சாலையில் பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். நகராட்சி நிர்வாகம் இன்னும் அங்குள்ள இடிபாடுகளை அகற்றப்படாததால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
நகராட்சி நிர்வாகம் விரைந்து இடிபாடுகளை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.