சென்னை: கரோனா பாதித்து தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சி.டி. ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள இன்று காலை மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கரோனா தொடர்பான அறிகுறிகளுடன் மருத்துவக் கண்காணிப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்திருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு சி.டி. ஸ்கேன் மருத்துவப் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்திருப்பதாகவும், சி.டி. ஸ்கேன் பரிசோதனை முடிந்து இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்றும் முன்னதாக செய்திகள் வெளியாகின.
இரண்டு நாள்களுக்கு முன்பு, தனக்கு உடல் சோர்வு இருந்ததால் மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டதாகவும், அதில் கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் மு.க. ஸ்டாலின் சுட்டுரைப் பதிவில் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க.. நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் என்ன? பேசினால் என்னாகும்?
கரோனா பாதித்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த மு.க. ஸ்டாலின், இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, சி.டி. ஸ்கேன் பரிசோதனைக்கு வந்திருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.